தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக அக். 2024 வரை இரண்டு நூல்கள் வெளியாகியுள்ளன.
நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் – நோக்கமும் அதன் பாதையும்:
“சிறார் கலை இலக்கியச் சந்திப்பு“ என்ற பெயரில் கடந்த செப்.2020 மாதம் முழுதும் வார இறுதியில், மொத்தம் பத்துத் தலைப்புகள், இருபது பேச்சாளர்கள் எனச் சிறார் இலக்கியம் மற்றும் கலைகள் சார்ந்து தொடர் கருத்தரங்கை நடத்தினோம்.
இந்தக் கருத்தரங்கு, தமிழ்நாட்டில் பரவலாக இயங்கிக் கொண்டிருந்த பலரையும் ஒன்றிணைத்தது என்றே சொல்ல வேண்டும். பாடல்கள், கதைகள், அறிவியல் படைப்புகள், இதழ்கள், இலக்கியத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறப்புக் குழந்தைகளின் இடம், கல்வி, வகுப்பறைகள், விளையாட்டுகள், நாடகம், கதை சொல்லல், ஓவியம், சூழலியல், நுண்கலைகள், கோமாளிகள், புத்தக வடிவமைப்பு, பதிப்பித்தல், விநியோகம், வாசித்தல், அறிமுகம் செய்தல்-போன்ற அனைத்து அம்சங்கள் சார்ந்தும் குழந்தைகள் உலகில் இயங்கிக் கொண்டிருந்த பலரையும் இணைத்துப் பல்வேறு கோணங்களில் உரையாடினோம். அந்த உரைகளையெல்லாம் உடனுக்குடன் எழுத்து வடிவில் ஆவணப்படுத்திப் பஞ்சு மிட்டாய் ( www.panchumittai.com ) என்ற இணைய தளத்தில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிட்டோம். அதன் பிறகு, ஒவ்வோர் தலைப்பையும் தனிப் புத்தகமாகவும் கிண்டில் தளத்தில் வெளியிட்டோம். தற்போது அனைத்து உரைகளையும் தொகுத்து ஒரே புத்தகமாக -தற்காலச் சிறார் இலக்கியம் மற்றும் கலைகள் குறித்து ஓர் ஆவணமாக இந்தப் ப்புத்தகம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நூல் குறித்து எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் கூறுகையில்,
தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் அரியத் தகவல்களோடு வரலாற்றையும், புதிய பாணியில் எழுதப்படும் சமகாலச் சிறார் இலக்கியப் படைப்புகளையும், எதிர்காலத்தில் சிறார் இலக்கியம் செல்ல வேண்டிய திசை குறித்தும் நுட்பமாக விவரிக்கிறது இந்நூல். இலக்கிய வாசகர்கள் முதல் ஆய்வறிஞர்கள் வரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஓர் ஆவணப் பதிவாகவும் விளங்குகிறது.
– விஷ்ணுபுரம் சரவணன்.
குறுநூல் வரிசை 1 : ஆத்திசூடி குழந்தைப் பாடலா?
1987ஆம் ஆண்டில் எட்டாவது குழந்தை இலக்கிய மாநாடு நடைபெற்றது. மூன்றுநாள் நடைபெற்ற மாநாட்டில் “வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்” என்ற தலைப்பில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா உரையாற்றினார். பின்னர் அது புத்தகமாகவும் வெளியானது. அதில் குழந்தை இலக்கிய வரலாறு குறித்துச் சுருக்கமாகவும், குழந்தைப் பாடல்கள் குறித்து விரிவாகவும் பேசியுள்ளார். அதில் முக்கியமாக, எது குழந்தைப் பாடல்கள்? என்ற கேள்வியையும் எழுப்புகிறார். ஒளவையார் எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன் ஆகியவற்றைக் குழந்தைகளுக்கான பாடல்கள் என்று இன்றும் நாம் கருதிவருகிறோம். ஆனால், இந்தப் பாடல்கள் பெரியவர்களை மனதில் கொண்டே ஒளவையார் எழுதியிருக்க வேண்டும் என்று அழ. வள்ளியப்பா அவர்கள் குறிப்பிடுகிறார். தனது கூற்றுக்குத் துணையாக மு.வரதராசனார் அவர்களின் பார்வையையும் மேற்கோள் காட்டுகிறார். காலத்தின் தேவைக் கருதி இந்த இரண்டு கட்டுரைகளையும் மீள் பதிவு செய்து அதன் அவசியம் குறித்தும் இந்தச் சிறு வெளியீட்டில் இந்தப் புத்தகம் பேசியிருக்கிறது.

தமிழ்நாடு சிறார்ர் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞகர்கள் சங்கம் இதுபோன்ற தொடர் குறுநூல் வெளியீடுகள் வழியே சிறார் இலக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறது. கூடவே, “சிறார் இலக்கிய – விமர்சனம் & ஆய்வு” எனும் புதிய வகைமையை உருவாக்க இந்த வெளியிடுகள் அடித்தளமாக அமையும் என்று நம்புகிறோம். குறுநூல் வரிசையில் அடுத்தடுத்து மேலும் சில நூல்கள் விரைவில் வெளிவரும்.
| எண் | புத்தகம் | வகைமை | ஆசிரியர் | பதிப்பு |
| 1 | நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் – நோக்கமும் அதன் பாதையும் | ஆய்வு நூல் | பஞ்சு மிட்டாய் பிரபு | பாரதி புத்தகாலயம் + தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், ஏப்ரல் 2024, விலை 280 |
| 2 | ஆத்திச்சூடி குழந்தைப் பாடலா ? | குறுநூல் வரிசை | பஞ்சு மிட்டாய் பிரபு | பாரதி புத்தகாலயம் + தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், செப் 2024, விலை 25 |
நன்றி.

